சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தனி தொகுதியில் மனுத் தாக்கல் செய்த பொது வேட்பாளர்கள்
நெல்லை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த 3 பேரில் இருவர் பொது வேட்பாளர்கள். சங்கரன்கோவில் தனி தொகுதியாக இருக்கும் நிலையில் அவர்களது மனுவை அதிகாரிகள் பெற்றுக் கொண்டது கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மனுக்கள் பரிசீலனையின்போது இவர்களின் மனுக்கள்தான் முதலில் டிஸ்மிஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் வரும் மார்ச் மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. நேற்று மட்டும் 3 பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களில் இருவர் பொது வேட்பாளர்கள். சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பத்மராஜன் கேரள நாயர் பிரிவைச் சேர்ந்தவர்.
சென்னையச் சேர்ந்த மற்றொரு சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீராமசந்திரன் வீரவன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இருவரும் பொது வேட்பாளர்கள் என்ற போதிலும் தனி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இது குறித்து பத்மராஜனிடம் கேட்டபோது, நான் பொது வேட்பாளரா, தனி பிரிவைச் சேர்ந்தவரா என்பது குறித்து வேட்புமனு பரீசிலனையின் போது தான் தெரிய தெரியும். இன்று நான் வேட்பாளர். இன்றைய நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள். பரீசிலனைக்கு முன் எனது சாதிச் சான்றிதழை நான் சரி பார்க்கலாம் அல்லவா என எதிர்கேள்வி கேட்டார்.
இது குறித்து தேர்தல் அதிகாரி செல்வராஜ் கூறுகையில், ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தால் அதை பெற்றுக் கொள்வோம். பரீசிலனையின் போது மட்டுமே ஆவணங்கள் இல்லையென்றால் தள்ளுபடி செய்ய முடியும் என்றார்.