சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தேர்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பொறியாளர்கள் இன்று ஆய்வு செய்தனர்.
சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் மார்ச் மாதம் 18ந் தேதி நடைபெறுகிறது. இடைதேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட மூவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
தேர்தல் பயிற்சி
சங்கரன்கோவில் தொகுதியில் வாக்களிப்பதற்காக மொத்தம் 242 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 பூத்களுக்கு ஓரு மண்டல அதிகாரி குழுக்கள் வீதம் 24 மண்டல அதிகாரி குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு குழுவிலும் மண்டல அதிகாரி, உதவியாளர் மற்றும் அலுவலர் ஆகியோர் இடம் பெறுவர். இந்த 24 குழுக்களுக்கும் நெல்லையில் தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்டவை இந்த பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது.
300 இயந்திரங்கள்
சங்கரன்கோவில் தேர்தலுக்காக சுமார் 300 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நி்லையி்ல் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நெல்லை இராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.