சங்கரன்கோவில் தொகுதியில் 25ம் தேதி முதல் வைகோ பிரசாரம்
சங்கரன்கோவில்: இடைத் தேர்தல் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரும் 25ம் தேதி முதல் பிரச்சாரம் தொடங்கவுள்ளார்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி இன்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த 30 அமைச்சர்களும் தொகுதியில் மாறி மாறி முகாமிட்டு ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
தி.மு.க வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க., வேட்பாளர் முத்துக்குமார் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நாளை மறுநாள் முதல் இந்தத் தொகுதியில் பிரச்சாரத்தைத் துவக்கவுள்ளார்.
25ம் தேதி மாலை சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து மார்ச் 16ம் தேதி வரை தொகுதியில் உள்ள 265 கிராமங்கள், சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டவுள்ளார்.
வைகோ அலை வீசுகிறது-சதன் திருமலைக்குமார்:
இந் நிலையில் சங்கரன்கோவில் தொகுதியில் வைகோ அலை வீசுவதாக சதன் திருமலைக்குமார் கூறியுள்ளார். அவர் கூறுகையில், வைகோ இந்த மண்ணுக்கு சொந்தக்காரர். காலையில் சங்கரன்கோவில், மதியம் சென்னை, இரவில் டெல்லி என அலையாய், அலைந்து மக்களுக்காக பாடுபட்டு வருகிறார்.
வைகோவின் அலை இங்கு பலமாக வீசுகிறது. பால் விலை, பஸ் கட்டணம் உட்பட அனைத்து விலைகளும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவு மின் வெட்டு நிலவுகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிறது. ஆளும் கட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக்கூறி பிரசாரம் செய்வோம்.
மக்களுக்காக போராடி வரும் வைகோவால் மதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றார்.