மும்பை போலீஸ் துப்பாக்கியிலிருந்து தப்பி சென்னையில் வீழ்ந்த கொள்ளையர் தலைவன்!

சென்னையில் இரண்டு வங்கிகளில் துணிகரமாக கொள்ளையை நடத்தி விட்டு தப்பி ஓடத் திட்டமிட்டிருந்த வினோத்குமார் உள்ளிட்ட ஐந்து கொள்ளையர்களை சென்னை போலீஸார், வேளச்சேரியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் வைத்து என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.
இதுதொடர்பாக தற்போது சர்ச்சைகள் வெடித்துள்ளன. மறுபக்கம் கொள்ளையர் தலைவனாக செயல்பட்ட வினோத்குமார் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
கொல்லப்பட்ட ஐவரில் இதுவரை வினோத்குமாரின் அடையாளம் மட்டுமே காணப்பட்டு உடல் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வினோத்குமாரின் பெற்றோர் நேற்று சென்னை வந்து அடையாளம் காட்டி தங்களது மகனின் உடலை விமானம் மூலம் பாட்னாவுக்குக் கொண்டு சென்றனர்.
வினோத்குமாரின் உண்மையான பெயர் சுஜாய் குமார் ரே. இவனது தந்தை பெயர் முனேஸ்வர் ரே. சுஜாயின் சொந்த ஊர் பாட்னா அருகே உள்ள கிராமம் ஆகும்.
சில வருடத்திற்கு முன்பே தனது வீட்டை விட்டு வெளியே வந்து விட்டானாம் சுஜாய். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளான். ஊருக்குச் செல்வதில்லையாம். போனில்தான் அடிக்கடி பேசி வந்துள்ளான்.
ஆனால் இவனது வாழ்க்கை இருள் சூழ்ந்ததாக உள்ளது. சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். அதாவது மிகப் பெரிய கொள்ளைக் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான். மும்பையில் மட்டும் இவன் மீது 3 வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளனவாம். கிட்டத்தட்ட ரூ. 81 லட்சம் பணத்தை இந்த வங்கிக்கொள்ளை மூலம் அவன் அபகரித்துள்ளான்.
21.6.2010-ல் மலாட் போலீஸ் நிலைய எல்லையில் ஒரு வங்கியில் கொள்ளையடித்துள்ளான். இதேபோல, 17.10.2010-ல் போரிவில்லி போலீஸ் நிலைய எல்லையில் ஒரு வங்கியிலும் பணத்தை துப்பாக்கி முனையில் அள்ளி சென்றுள்ளான். 10.11.2010-ல் சார்க்கோப் என்ற இடத்தில் ஒரு வங்கியில் கொள்ளையடித்துள்ளான்.
இந்த 3 கொள்ளை வழக்குகளிலும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சுஜாய் மட்டும் தலைமறைவாக இருந்துள்ளான். இவனை கண்டவுடன் சுடவும் மும்பை போலீஸார் உத்தரவிட்டிருந்தனர். இவனைப் பற்றிய விவரங்கள் மட்டுமே போலீஸாரிடம் இருந்தது. ஆனால் புகைப்படமோ அல்லது கைரேகை போன்றவையோ இல்லை என்பதால் பிடிக்க முடியாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்த சுஜாய் இங்கு அடுத்தடுத்து 2 வங்கிகளில் கொள்ளையடித்துள்ளான்.
இவனது கையில் இரண்டு விரல்கள் கிடையாது. இதுகுறித்து நேற்று சென்னை வந்திருந்த சுஜாயின் பெற்றோர், போலீஸாரிடம் கூறுகையில், பாட்னாவில் நடந்த குண்டுவெடிப்பின்போது விரல்கள் பறிபோனதாக கூறியுள்ளனர். எனவே இவனுக்கு நக்சலைட் கும்பல்களுடன் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications