கோவாவில் பிரதமரின் தேர்தல் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு
பனாஜி: கோவாவில் உள்ள கல்லூரி மைதானத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளும் தேர்தல் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
கோவாவில் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நாளை பிரதமர் மன்மோகன் சிங் கோவாவில் நடக்கும் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதற்காக சங்கலிம் கல்லூரி மைதானத்தை காங்கிரஸ் தலைவர்கள் தேர்வு செய்தனர். ஆனால் அங்கு தேர்தல் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
இது குறித்து இணை தலைமை தேர்தல் அதிகாரி நராயண் நவ்டி கூறியதாவது,
அரசு, தனியார், அரசு உதவி பெறும் எந்த கல்வி நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்தக் கூடாது. அரசியல் கூட்டத்திற்கு கல்லூரி மைதானத்தை கொடுக்கக் கூடாது என்று உயர் கல்வித் துறை இயக்குனரிடம் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இந்நிலையில் கல்லூரி மைதானத்தில் டென்ட் போட்டு, பேனர் வைக்கச் சென்ற காங்கிரஸாரை கல்லூரி நிர்வாகிகள் வெளியேறும்படி கூறியுள்ளனர். இது குறித்து உயர் கல்வித் துறை இயக்குனர் பாஸ்கர் நாயக் கூறுகையில், அரசு கல்லூரி மைதானத்தில் அரசியல் கூட்டம் நடத்த நாங்கள் அனுமதி மறுத்துள்ளோம். தேர்தல் ஆணைய விதிமுறைப்படி அரசு கல்லூரி வளாகத்தில் தேர்தல் கூட்டம் நடத்தக் கூடாது என்றார்.
நாளை பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு இன்னும் இடம் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications