மாநில முதல்வர்களின் கடும் எதிர்ப்பு- தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு
டெல்லி: மாநில முதல்வர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தீவிரவாத தடுப்பு மையம்
தீவிரவாதத்தை ஒழிக்கவும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம்' என்ற அமைப்பை வருகிற 1-ந் தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி பிறப்பித்தது. இந்த மையத்திற்கு ஒரு இயக்குனர், 3 இணை இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட உள்ள, இந்த அமைப்புக்கு மாநில அரசுகளின் அனுமதி இல்லாமலேயே அதிரடி சோதனைகள் நடத்துவதற்கும், கைது செய்வதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டது.
முதல்வர்கள் எதிர்ப்பு
ஆனால் மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு, ஒரிசா, மேற்குவங்கம், குஜராத் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல் மாநில் உரிமைகளைப் பறிக்கக் கூடிய ஒரு அமைப்பை ஏற்படுத்தியதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கக் கடிதத்தையும் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் 1-ந் தேதி முதல் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன,.
மாநில தலைமைச் செயலாளர்கள்.காவல்துறை தலைவர்களுடனான "முறையான" ஆலோசனைக்குப் பிறகே தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை மத்திய அரசு அமைக்கும் என்றும் கூறப்படுகிறது.