கோவையில் 25 நாய்கள் அடுத்தடுத்து பலி: விஷம் வைத்து கொல்லப்பட்டனவா?
கோவை: கோவையில் தோட்டம் ஒன்றில் வளர்க்கப்பட்ட 25 நாய்கள் அடுத்தடுத்து பலியாகின. அவைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராம்நாராயணா மில்லையொட்டி அமிர்தா சூரியகாந்த் என்பவரது பண்ணை தோட்டம் உள்ளது. அமிர்தா சூரியகாந்த் வெளிநாட்டில் வசிப்பதால் தோட்டத்தை பரமசிவன் என்பவரும், அவரது மகன் பூவண்ணனும் பராமரித்து வந்தனர்.
பூவண்ணன் பல வகையான நாய்களை வளர்ப்பதில் ஆர்வமிக்கவர். மேலும் தோட்டத்தின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அவர் 25க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு தோட்டத்தில் சுற்றித் திரிந்த நாய்கள் அடுத்தடுத்து செத்து விழுந்தன. மேலும் தோட்டத்தில் 3 காகங்களும் செத்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பூவண்ணன் இது குறித்து வடவள்ளி விலங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தார்.
நாய்களுக்கு கொடுத்த உணவில் யாராவது விஷம் கலந்திருக்கலாம் என்று தான் சந்தேகப்படுவதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். விலங்குகள் பாதுகாப்பு மைய தலைவர் கல்பனா வாசுதேவன் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.