டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் 6 பேர் டிஸ்மிஸ்
சென்னை: தமிழகத்தில் சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய டாஸ்மாக் மேலாளர்கள் 6 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தனியாரிடம் இருந்த மதுக்கடைகளை கடந்த 2003ம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை கலெக்டர் அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மேலாளராக பணியாற்றி வந்தனர்.
தமிழகம் முழுவதும் 6,600 டாஸ்மாக் கடைகளில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் கடை, பார் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் என்று சுமார் 35,000 பேர் நியமிக்கப்பட்டனர்.
முதலில் துணை கலெக்டர் அந்தஸ்தில் மாவட்ட மேலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து 2004ம் ஆண்டு எம்.பி.ஏ. பட்டதாரிகள் 32 பேர் தேர்வு செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் மேலாளராக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது முறையாக பணி நியமனம் செய்யப்படவில்லை என்று கூறி 32 பேரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் துணை கலெக்டர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் மாவட்ட மேலாளர் பணிக்கு நியமிகப்பட்டு அப்பணியை கவனித்து வந்தனர்.
அதன்பிறகு மீண்டும் 2011ல் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.ஏ. பட்டதாரிகள் தங்களை மீண்டும் டாஸ்மாக் மேலாளராக நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கு கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா 7 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இதனையடுத்து மீதமுள்ள 25 பேருக்கும் மாநில நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 16 பேர் பணி அமர்த்தப்பட்டனர். மீதமுள்ள 16 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பணியாற்றி வந்த 16 பேரில் சென்னை வடக்கு மாவட்ட மேலாளர் மாரிமுத்து, தெற்கு மாவட்ட மேலாளர் புஷ்பலதா, நீலகிரி மாவட்ட மேலாளர் செங்கிஸ்கான், கரூர் பாலமுருகன், கன்னியாகுமரி மனோகர், புதுக்கோட்டை ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் டாஸ்மாக் மாநில நிர்வாக இயக்குனர் சவுண்டையா பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த 16 பேரில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜெயராஜ், சிவகங்கை சரவணன், சென்னை தெற்கு புனிதா, வடக்கு மணிவண்ணன், கரூர் ரத்தினம், நீலகிரி வடமலைமுத்து ஆகிய 5 பேர் உடனடியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.