சென்னை கொள்ளையர்களில் மேலும் ஒருவரின் அடையாளம் தெரிந்தது- மடாதிபதியைக் கொன்றவன்
சென்னை சென்னையில் போலீஸாரின் என்கவுண்டரில் கொல்லப்பட்ட கொள்ளையர்களில் மேலும் ஒருவரின் அடையாளம் தெரிந்துள்ளது. அவன் பீகாரில் மடாதிபதி ஒருவரைக் கொலை செய்து விட்டு சென்னையில் தலைமறைவாக வாழ்ந்து வந்தவன் என்று தெரிய வந்துள்ளது.
சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு போலீஸாரின் கையில் சிக்கி என்கவுண்டரில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் வினோத்குமார் என்கிற சுஜாய் குமார் ராய் மற்றும் வினய் பிரசாத் ஆகியோரின் அடையாளம் மட்டும் இதுவரை தெரிந்திருந்தது.
இவர்களில் வினோத்குமார்தான் கொள்ளைக் கூட்டத் தலைவன் என்பதும் பல்வேறு வங்கிக் கொள்ளைகள், கொலைகளில் இவனுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. வினோத்குமாரின் உடலை அவனது குடும்பத்தினர் வாங்கிச் சென்று விட்டனர்.
இவர்கள் தவிர வினய் பிரசாத்தின் உடலும் அடையாளம் காணப்பட்டு விட்டது. இவர்கள் தவிர அபய்குமார், ஹரீஷ்குமார், சந்திரிகா ரே ஆகியோரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படாமல் இருந்தது. இவர்களில் தற்போது ஹரீஷ்குமாரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. மேலும் வினய் பிரசாத் குறித்த கூடுதல் விவரங்களும் தெரிய வந்துள்ளன.
வினய் பிரசாத் பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் பகபூர் கிராமத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. இவனது குடும்பத்தினர் இன்று சென்னை வரவுள்ளனர்.
வினய் பிரசாத்துக்கு தமிழ் நன்றாகத் தெரியுமாம். சென்னையில் ஆட்டோ ஓட்டுநராகவும் இருந்துள்ளான்.
மேலும் ஹரீஷ்குமாரின் உண்மையான பெயர் ராஜீவ் குமார் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சென்னை வேளச்சேரியில் இறந்த இருவரின் உடல்கள் பீகாரில் அடையாளம் காணப்பட்டது. வேளச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில், ஹரிஷ்குமார், த/பெ-பாஞ்சி ரே, புருஷோத்தம்புர் கிராமம், வைஷாலி மாவட்டம், பீகார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் ஹரிஷ்குமாரின் உண்மையான பெயர் ராஜீவ்குமார் என்பதும், அவனது தந்தை பெயர் பிஜேந்தர் யாதவ் என்பதும், பீகார் மாநிலம் மில்கிபுர் கிராமம், ஹில்சா காவல்நிலைய எல்லை, நாளந்தாவை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது.
ராஜீவ்குமார் ஒரு மடாதிபதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். ராமேஷ்வர்தாஸ் என்பவர் பத்வா கிராமத்தில் உள்ள கபீர் மடத்தின் மடாதிபதியாவார். இந்த மடத்திற்கு 250 ஏக்கர் நிலம் மற்றும் பெருமளவிலான சொத்துக்கள் உள்ளன. ராஜீவ்குமார் இந்த மடத்தில் உதவியாளராக இருந்து வந்துள்ளான். பரமானந்த தாஸ் என்பவர் கபீர் மடத்தின் மடாதிபதியாகும் நோக்கில், மடாதிபதியான ராமேஷ்வர் தாசை கொல்ல ராஜீவ்குமாரை நியமித்தார்.
27.09.2009 அன்று, ராஜீவ்குமார் கபீர் மடத்தின் மடாதிபதியை சுட்டுக்கொன்றான். இதுநாள் வரையில் காவல்துறையினரால் ராஜீவ்குமாரை பிடிக்க முடியவில்லை. மேலும் 2010-ம் ஆண்டு மும்பை சார்கோப் காவல் நிலையம் மற்றும் போரிவில்லி காவல் நிலையங்களில் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய வங்கி கொள்ளைகளில் தேடப்படும் குற்றவாளியாவான்.
இறந்த மற்றொருவருமான வினய் பிரசாத் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது. அவர்கள் வினய் பிரசாத்தின் புகைப்படத்தை அடையாளம் காட்டினார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினோத்குமார், ராஜீவ் குமார், வினய் பிரசாத் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரண்டு பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பீகாருக்கு ஒரு தனிப்படை போலீஸார் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.