ஹெராயின் பயன்பாடு: தெற்காசியாவில் இந்தியாதான் நம்பர் ஒன்: ஐ.நா. குழு அறிக்கை
இது குறித்து போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் டைரக்டர் ஜெனரல் ஓ.பி.எஸ். மாலிக் கூறியதாவது,
ஹெராயின் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து தெற்காசியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு கடத்தப்படுகிறது. தெற்காசியாவிலேயே இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 17 டன் ஹெராயின் பயன்படுத்தப்படுகிறது. அதன் மதிப்பு ரூ. 7,000 கோடி ஆகும்.
தெற்கு மற்றும் மேற்கிந்தியாவின் பெருநகரங்களில் உள்ள மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளது தான் இதற்கு காரணம். இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் ஹெராயின் இங்கிருந்து அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இந்தியாவில் சுமார் 7,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாக ஓபியம் பயிரிடப்படுகிறது. இங்கு ஹெராயின் தவிர கொக்கைனுக்கும் மவுசு அதிகரித்துள்ளது என்றார்.
கடந்த ஆண்டு 23 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப் பொருள் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.