சென்னை சிறுவனைக் கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் 2 உ.பி.காரர்கள் உள்பட 4 பேர் கைது

சென்னை மகாகவி பாரதிநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் யுவராஜ் (15). அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 26ம் தேதி காலை தனது வீட்டை விட்டு வெளியில் போன யுவராஜ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இரவாகியும் யுவராஜ் வராததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர். இதையடுத்து மகன் படிக்கச் செல்லும் டியூஷன் சென்டருக்குப் போய் கிருஷ்ணன் விசாரித்தார். ஆனால் அங்கு யுவராஜ் இல்லை.
எங்கு தேடியும் யுவராஜ் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு யுவராஜின் தந்தைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உங்கள் மகனை நாங்கள் கடத்தியிருக்கிறோம். உங்களுக்கு உங்கள் மகன் வேண்டும் என்றால் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவனை கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து கிருஷ்ணன், மகாகவி பாரதி நகர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து இணை ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் கொடுங்கையூரில் ஒரு வீட்டில் வைத்து யுவராஜ் மீட்கப்பட்டார்.
யுவராஜ் மீட்கப்பட்டது குறித்து இன்று செய்தியாளர்களிடம் இணை ஆணையர் சங்கர் விவரித்தார்.
அப்போது அவர் கூறுகையில், யுவராஜ் முத்தியால்பேட்டை மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 26ம்தேதி காலை வீட்டிலிருந்து வெளியே கிளம்பினார். நண்பர்களுடன் அவர் சில இடங்களுக்குப் போயுள்ளார். அவரது நண்பர்களின் பெயர்கள் - விஜய்குமார், இவர் கொடுங்கையூரைச் சேர்ந்தவர். வசந்த், இவர் வியாசர்பாடியைச் சேர்ந்தவர். சகோதரர்களான ஆஸம்கான் மற்றும் அன்வர்கான். இவர்கள் இருவரும் உ.பியைச் சேர்ந்தர்கள்.
ஈசிஆர் சாலையிலும் சில இடங்களுக்குப் போயுள்ளார். பின்னர் வீடு திரும்புகையில், அவரது நண்பர்கள், தங்களது வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களுடன் சென்றார் யுவராஜ்.
கொடுங்கையூரில் உள்ள விஜய்குமார் வீட்டுக்குப் போயுள்ளனர். அன்று இரவு அங்கு தங்கியுள்ளனர். உண்மையில், திட்டமிட்டு இந்த வீட்டுக்கு அவர்கள் நான்கு பேரும் கடத்தி வந்துள்ளனர். வீட்டுக்குப் போன பிறகுதான் யுவராஜைக் கடத்தி வந்ததை அவரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மிரட்டியும் உள்ளனர்.
யுவராஜை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்ட பின்னர் அவரது தந்தைக்கு நேற்று போன் செய்து ரூ. 1 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து 3 உதவி ஆணையர்கள் தலைமையில் நான்கு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினோம்.
யுவராஜ் எங்கெல்லாம் போக வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் தேடினோம். இந்த நிலையில்தான் விஜய்குமார் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது. இதையடுத்து விஜய் வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தினோம். அப்போது அங்கு யுவராஜ் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். வீட்டில் அன்வர்கான் இருந்தார்.
இதையடுத்து யுவராஜிடம் விசாரித்தபோது தன்னை நான்கு பேரும் சேர்ந்து கடத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து அன்வர்கானையும், பின்னர் மற்ற மூவரையும் பிடித்தோம்.
வீட்டில் சோதனையிட்டபோது ஐந்து நாட்டுத்துப்பாக்கிகள் கிடைத்தன. இந்த துப்பாக்கிகள் அன்வர்கான், ஆஸம்கானின் தந்தைக்குச் சொந்தமானது என்று அவர்கள் தெரிவித்தனர். இவர்களின் தந்தை உ.பியில் இருக்கிறார். தற்போது ஒரு வழக்கில் சிக்கி அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
நான்கு பேரில் வசந்த் பிளஸ் ஒன் படிக்கிறார். விஜய்குமார் வேல்ஸ் என்ஜீனியரிங் கல்லூரியல் படித்தவர். அன்வர்கானும், ஆஸம்கானும், கொடுங்கையூரில் உள்ள ஒரு பிளாஸ்டிக் கழிவு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
கிருஷ்ணன் தனது வீட்டின் கீழ்ப் பகுதியில் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதன் மூலம்தான் கடத்தலுக்கான திட்டத்தை அவர்கள் போட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
கடத்தி வைக்கப்பட்டிருந்த யுவராஜை, அவர்கள் எந்தவகையிலும் துன்புறுத்தவில்லை. நண்பர்களாக இருந்தவர்களே இப்படிக் கடத்தல்காரர்களாக மாறியது யுவராஜை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் இணை ஆணையர் சங்கர். பேட்டியின்போது சிறுவன் யுவராஜ் மற்றும் அவரது பெற்றோரும் உடன் இருந்தனர்.
சமீபத்தில்தான் வட மாநிலக் கொள்ளையர்களின் துணிகர வங்கித் திருட்டு மற்றும் போலீஸ் என்கவுண்டரில் அவர்கள் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உ.பியைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உதவியுடன் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் மாணவனைக் கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டி சிக்கியது பரபரப்பைக் கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications