வாக்குமூ்லம் பெறுவதை தள்ளி வைக்கக் கோரிய சசி மனு நிராகரிப்பு

முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசியின் அண்ணி இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவை தொடர்ந்து சசிகலா தற்போது வாக்குமூலம் அளித்து வருகிறார்.
நேற்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜுர்னய்யா முன்னிலையில் சசிகலா வாக்குமூலம் அளித்தார். அப்போது அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா, சசிகலா வக்கீல் மணிசங்கர் ஆகியோர் ஆஜரானார்கள்.
பையனூர் பங்களா, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்கள் குறித்த நீதிபதியின் கேள்விகளுக்கு நேற்று சசிகலா பதில் அளித்தார். போலீசாரின் நெருக்கடியால் சொத்துகளின் மதிப்பை அதிகரித்து சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஒரு கட்டத்தில் சசிகலாவின் நீண்ட பதிலால் நீதிபதி அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் சசிகலாவின் வக்கீலைப் பார்த்து, சசிகலா விளக்கம் அளிக்கிறாரா? அல்லது மொழிபெயர்ப்பு செய்கிறாரா?. இதுபோன்ற விளக்கங்களை நீங்கள் வாதிடும்போது எடுத்துச் சொல்லலாம்'' என்றார்.
அதற்கு சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், சில கேள்விகள் நீளமாக உள்ளன. அத்தகைய கேள்விகளுக்கு அவசியமான, விளக்கமான பதில் தேவைப்படுகிறது என்றார். தொடர்ந்து சசிகலா வாக்குமூலம் அளித்தார். நேற்று மட்டும் சசிகலா 47 கேள்விகளுக்கு சசி வாக்குமூலம் அளித்தார்.
நேற்றைய விசாரணையின் முடிவில், வக்கீல் மணிசங்கர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள சிறப்பு விடுப்பு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. எனவே, சசிகலாவிடம் வாக்குமூலம் பெறும் பணிகளை வருகிற 6-ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இதனால் இன்றும் சசிகலாவிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது.












Click it and Unblock the Notifications