நடிகை ஜெயப்பிரதா தங்கிய ஓட்டல் அறையில் போலீஸ் ரெய்டு!

உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா எம்.பி. தற்போது அமர்சிங்கின் ராஷ்டிரீய லோக் மன்ஞ் கட்சியில் உள்ளார்.
இந்த கட்சியின் சார்பில் ராம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரேஷ்மாவை ஆதரித்து ஜெயப்பிரதா இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த தொகுதியில் சாமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முகமது ஆசம்கான் மீண்டும் போட்டியிடுகிறார். பிரசாரத்தின் போது பேசிய ஜெயப்பிரதா, ராம்பூர் தொகுதியில் ஆசம்கான் தோல்வியை சந்திப்பது உறுதி என்றார்.
தேர்தல் பிரசாரம் செய்த ஜெயப்பிரதா ராம்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்தார் ஜெயப்ரதா.
தனது அறையில் போலீசார் சோதனை நடத்தியதற்கு சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம்கான்தான் காரணம் என்று ஜெயப்பிரதா குற்றம்சாட்டினார்.
"நான் ஒரு பெண், இந்த தொகுதியில்தான் எனக்கு வாக்குரிமை உள்ளது. மேலும் நான் எம்.பி.யாகவும் இருக்கிறேன். அப்படி இருக்கும் போது ஆசம்கான் கொடுத்த பொய் புகாரின் பேரில் எனது அறையில் போலீசார் சோதனை நடத்தியது என்னை அவமதிக்கும் செயலாகும்'' என்றார் ஜெயப்ரதா.
மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடமும் அவர் புகார் செய்துள்ளார்.
ஆனால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பானு பாஸ்கர் கூறுகையில்; வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த ஓட்டலில் உள்ள எல்லா அறைகளிலும் போலீசார் சோதனை நடத்தியதாகவும், அதில் ஒரு அறையில் ஜெயப்பிரதா இருந்துள்ளார். அது போலீஸ் தவறல்ல, என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications