ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை: மக்கள் அதிருப்தி
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ரேஷன் கடைகளில் காலாவதியான மளிகைப் பொருட்கள் விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சீனி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. கடந்த தி்முக
ஆட்சியில் மிளகு, சீரகம், கடுகு, கடலை பருப்பு, மஞ்சள் பொடி, மிளகாய், மல்லித்தூள் உள்பட 10 வகை மளிகைப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போது ரேஷனில் மஞ்சள், மிளகாய், மல்லித்தூள், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 10 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய பை ரூ.25க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த பைகளை தயாரித்த 6 மாதத்தி்ற்குள் விற்பனை செய்யப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
ஆனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் காலாவதி தேதி முடிவடைந்த நிலையில் உள்ள மளிகைப் பொருட்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வயிற்று கோளாறு, குடல்புண் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து ரேஷன்கார்டுதாரர்கள் கூறுகையில், இப்பொருட்களை வாங்கினால் தான் கோதுமை, சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்கள் தருவோம் என கடை ஊழியர்கள் கண்டிப்புடன் கூறுவதால் வேறு வழியின்றி காலாவதியான பொருட்களை வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்றனர்.
இது குறித்து அரசு தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.