ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களை பாதுகாக்க கோரி ஹஸாரே நாளை உண்ணாவிரதம்!
நொய்டா: ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களை பாதுகாக்கக் கோரி அன்னா ஹசாரே நாளை ராம்லீலா மைதானத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த போராட்டம் குறித்து நொய்டாவில் செய்தியாளர்களிடம் ஹஸாரே கூறுகையில், "வலுவான லோக்பால் மசோதாவுக்காக கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினேன். ஆனால் வலுவான லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய லோக்பால் மசோதாவால் எந்த பயனும் இல்லை. இது ஊழலை ஒழிக்க பயன்படாது.
வெள்ளிக்கிழமை மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி லோக்பால் மசோதா பற்றி விவாதம் நடத்தியது. இதில் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் தோல்வியில் முடிந்தது. இதில் அரசு இறுதி முடிவு எடுக்க தயங்கினால் நாங்கள் மக்கள் மன்றத்தின் முன் லோக்பால் மசோதாவை எடுத்துச் செல்வோம்.
மத்திய அரசு எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு இல்லை. சமீப காலமாக லஞ்ச- ஊழலுக்கு எதிராக செயல்பட்ட நேர்மையான அதிகாரிகள் உள்பட 25 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் துணிச்சலுடன் செயல்படும் அதிகாரிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரக்கோரி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.
இறுதியாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். வருகிற 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்த போராட்டம் நடக்கும். எனது போராட்டம் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தனிப்பட்ட சொந்த லாபத்துக்காக நான் போராட்டம் நடத்தவில்லை. மக்களுக்காக போராடுகிறேன்.
முதல் கட்டமாக லஞ்ச பேர்வழிகளிடம் இருந்து நேர்மையானவர்களை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிறன்று உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன். இதில் ஊழல்- கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட 25 பேரின் குடும்பத்தினரும் கலந்து கொள்கிறார்கள்," என்றார்.












Click it and Unblock the Notifications