நிராயுதபாணி தமிழக மீனவர்களை இத்தாலி படையினர் கொன்றது தீவிரவாதச் செயலே: கேரள உயர்நீதிமன்றம்
கொச்சி: கைகளில் ஆயுதமில்லாமல் இருந்த நிராயுதபாணி தமிழக மீனவர்களை இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றது தீவிரவாத செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது..
தமிழக மீனவர்கள் அஜீஸ் பிங்கி (வயது 25), ஜெலஸ்டீன் (45) ஆகிய இருவரும் கேரள கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கடந்த மாதம் 15-ந் தேதி, அந்த வழியே வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பலில் இருந்த பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அந்த கப்பல் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் கப்பல் கம்பெனியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பதில் மனு
இந்த வழக்கில் கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ்செயல்படும் வணிக கப்பல் துறை பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரச்சினைக்குரிய கப்பலை திருப்பி அனுப்புவதில் இந்திய கப்பல் துறை தலைமை இயக்குனருக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு தேவைப்படுகிறபோது கப்பலின் தலைமை மாலுமி, பாதுகாவலர்களை தகுதியான விசாரணை ஆணையத்தின் முன்பாகவோ, நீதிமன்றம் முன்பாகவோ ஆஜர்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கப்பலை திருப்பி அனுப்பலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாத செயல்
இந்த நிலையில் கப்பல் கம்பெனியின் மனு நேற்று நீதிபதி சி.எஸ்.கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "எந்த வித எச்சரிக்கையும் விடுக்காமல், கையில் ஆயுதமின்றி இருந்த இரண்டு பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். அந்த வகையில் இது ஒரு தீவிரவாதச்செயல்'' என்றார்.
கேரள அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி, "கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் தடயவியல் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அந்த அறிக்கை வந்தபின்னர்தான் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளிலிருந்துதான் மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணமான குண்டுகள் சுடப்பட்டனவா என்பதை உறுதி செய்ய முடியும்'' என்றார்.
இதையடுத்து மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications