தவெக ஆட்சி அருமையாக இருக்கு.. குற்றங்கள் எல்லா ஆட்சியிலும் நடக்கிறது! விஜய்க்கு ஆதரவாக பேசிய வைகோ
சென்னை: தவெக ஆட்சி எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, "அருமையாக இருக்கு" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார். மேலும், குற்றச் சம்பவங்கள் எந்த ஒரு ஆட்சியிலும் நடப்பவைதான் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் விஜய்யின் தவெக ஆட்சி எப்படி இருக்கு என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வைகோ, "அருமையாக இருக்கு.. அவ்வளவு தான்.." என்றார். மேலும், மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் சேலத்தில் நடந்திருப்பதாக வந்த செய்தி பற்றி பதில் அளித்த வைகோ, "அது பல ஆண்டுகளாக எல்லா ஆட்சியிலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படி சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது, வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

குற்றங்கள் எல்லாரது ஆட்சியிலும் நடக்குது
மத்திய அரசு அந்த சட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். ஜாமீனில் நீதிபதிகள் விடவே கூடாது. அப்படி ஒரு வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் தான் இருக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால் தான், இந்த மிருகங்களுக்கு கொஞ்சமாவது பயம் இருக்கும். இது இப்போ நடக்கவில்லை. எல்லாரது ஆட்சியிலும் தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு முந்தியும் நடக்கத் தானே செய்தது.
நாங்கள் இன்னும் கூட்டணியை பற்றி யோசிக்கவே இல்லையே.. அதற்கு எல்லாரும் உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என சொல்கிறார்கள். நாங்கள் எவ்வளவு விசுவாசமாக இருந்து திமுகவை வெற்றி பெற வைக்க முடியுமோ அந்த அளவுக்கு வேலை செய்தோம். சாத்தூர் தொகுதியில் கூட கடுமையாக பிரசாரம் செய்து திமுகவை வெற்றி பெற செய்தோம். திமுக கூட்டணியில் இருந்தவர்கள் பலரும் இப்போது ஆட்சியில் கூட சேர்ந்துவிட்டார்கள். நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஆனால் சமூக வலைத்தளத்தில் இருப்பவர்கள் எங்களை எப்படி பேச முடியுமோ அப்படி பேசி வருகிறார்கள். நாங்கள் அவசரப்படவில்லை. நாங்கள் எதுவும் பேசவில்லை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் 27 ஆம் தேதி எங்கள் பொதுக்குழு கூடும். எல்லாரது கருத்துக்களையும் கேட்டு தான் நாங்கள் முடிவு எடுப்போம்.
இந்து முன்னணி
ஆளுநர் அர்லேக்கர் திருவள்ளூவருக்கு காவி சாயம் பூசியதால் நாங்கள் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தோம். கடுமையாக கண்டனம் தெரிவித்து கருப்புச் சட்டை போட்டு போராட்டம் செய்தோம். நாங்கள் இந்துக்கு எதிராக போராடினோம் என நினைத்து இந்து முன்னணியினர் எங்கள் அலவலகத்தை முற்றுகையிடப் போவதாக சொல்கிறார்கள். முற்றுகையிடட்டும். பெற வேண்டியதை பெற்றுக் கொடுப்போம். கட்சி ஆபிசை முற்றுகை செய்வோம் என போராட்டம் செய்வதை போலீசார் அனுமதிக்க கூடாது. அனுமதிக்க மாட்டார்கள். அதை மீறி வந்தால் அதற்கான பலனை அவர்கள் பெறட்டும்." என்று கூறினார்.
வைகோவின் மதிமுக 2026 சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும் தேர்தல் முடிவுக்கு பிறகு தவெகவிற்கு ஆதரவாவே பேசிக்கொண்டு வருகிறார். துரை வைகோவும் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதற்கு வருத்தம் அளிப்பதாக கூறினார். மேலும் இனி வரும் தேர்தல்களில் மதிமுக பம்பரம் சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications