யூனிநாரிலிருந்து வெளியேற ரூ15 கோடி டாலர்- யூனிடெக் திடீர் நிபந்தனை

யூனிநார்
நார்வேயின் டெலிநார் மற்றும் இந்தியாவின் யூனிடெக் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் திட்டம் யூனிநார் ஆகும். இந்த கூட்டு நிறுவனம் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் செல்போன் சேவை வழங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த யூனிடெக், இந்த கூட்டுத் திட்டத்தில் 32.7 விழுக்காடு பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. நார்வே நிறுவனம் 67.25 விழுக்காடு பங்குகளைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம், கடந்த 2009-ஆம் ஆண்டில் இந்த பங்குகளை வாங்கியது.
பிரச்சனை என்ன?
யூனிநார் நிறுவனம் தற்போது சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் பிப்ரவரி 2-ந் தேதி அன்று, 2008-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 122 செல்போன் சேவை உரிமங்களை ரத்து செய்து ஆணை வெளியிட்டது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுள் யூனிநாரும் ஒன்றாகும். இதனையடுத்து டெலிநாருக்கும், யூனிடெக்கிற்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. யூனிநார் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான நிதி திரட்டுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக டெலிநார் நிறுவனம் யூனிநார் நிறுவனத்திலிருந்து வெளியேற தயாரானது. இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இழப்பீடு கோரி யூனிடெக் நிறுவனத்திற்கு நோட்டீசும் அனுப்பியது. மேலும் முற்றிலும் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி, தற்போதைய வாடிக்கையாளர்கள், நிறுவனப் பணியாளர்களுடன் அதற்கு இடம் பெயரப் போவதாகவும் அறிவித்தது.
யூனிடெக் நிலை
தொடர்ந்து டெலிநார் தனது 67.25 விழுக்காடு பங்குகளை யூனிடெக்கிற்கு விற்று விட்டு வெளியேறுவதா அல்லது யூனிடெக் தனது 32.7 விழுக்காடு பங்குகளை டெலிநாருக்கு விற்பனை செய்து விட்டு விலகுவதா என்ற சர்ச்சை தோன்றியது. நார்வே நிறுவனத்தின் பங்கு மூலதனத்தை பெற விரும்பினால் அது குறித்து மார்ச் 19-க்குள் முடிவு செய்யுமாறு யூனிடெக்கிற்கு கம்பெனிகள் சட்ட வாரியம் அறிவுறுத்தியது. இந்நிலையில் யூனிடெக் நிறுவனம் தற்போது தனது பங்கு மூலதனத்தை டெலிநாரிடம் கொடுத்து விட்டு வெளியேற விரும்புவதாக கம்பெனிகள் சட்ட வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. யூனிடெக் நிறுவனம், தனது 32.7 விழுக்காடு 15 கோடி டாலர் கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications