கூடங்குளம் போராட்டம் 6-வது நாளாக நீடிப்பு - ஏடிஜிபி ஜார்ஜ் இன்று மீண்டும் ஆய்வு
இடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டக்காரர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளாக நீடிக்கிறது. போராட்டக் குழுவினரை பரிசோதித்த மருத்துவக் குழு, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் போராட்டத்தில் பெருமளவிலான கிராமப் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்வதற்காக தமிழக ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் இன்று கூடங்குளம் வந்தார்.
கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் ஜார்ஜ் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலை போராட்டக்காரர்களுக்கு நாங்கள் எந்தவித இடையூறும் செய்யவில்லை. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் யாரையும் மிரட்டவில்லை. வழக்கு உள்ளவர்களை மட்டும்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
எங்கள் கடமை
கைதான 178 பேர் சாலை மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் சில தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அவற்றை அகற்றுமாறு கேட்டு கொண்டுள்ளோம். தற்போது கூடங்குளத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. முற்றிலும் சீரான பிறகு போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும். அணு மின் நிலைய பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களது கடமை.
உதயகுமார் கைதா? ஜார்ஜ் மழுப்பல்
கூடங்குளத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதற்காகத்தான் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அணு உலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கைது செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் பதில் ஏதும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications