கல்லூரி தாளாளர் நியமன விவகாரம்: தமிழக அரசு மீது மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. வழக்கு !
திருப்பூர்: திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் தாளாளர் நியமனத்தில் தமிழக அரசு சட்ட விதிகளை மீறியுள்ளதாக திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. தங்கவேல் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.-வுமான கே.தங்கவேல் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், 'திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு சொந்தமான திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தின் துணை சட்ட விதியில், இக் கல்லூரிக்கு திருப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தான் கல்லூரியின் தலைவர் மற்றும் தாளாளராக நியமிக்கப்பட வேண்டும் என விதி உள்ளது.
இந்த நிலையில் சட்டமன்றத் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டதில் திருப்பூர் தொகுதி திருப்பூர் (தெற்கு), திருப்பூர் (வடக்கு) மற்றும் பல்லடம் தொகுதியின் ஒரு பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில், திருப்பூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் திருப்பூர் (தெற்கு) தொகுதி எல்லைக்குள் அமைந்துள்ளது. இதன் அடிப் படையில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் தலைவர் மற்றும் தாளாளராக திருப்பூர் தெற்குத் தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில் என்னை நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை 16 ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் 2 ம் தேதி திருப்பூர் வடக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான, அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை குமரன் கல்லூரியின் தாளாளராக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எந்த வகையிலும் தொடர்பில்லாத திருப்பூர் வடக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயல், சட்ட விதிகளை புறக்கணித்த, ஒருதலைப் பட்சமான நடவடிக்கையாகும்.
மேலும், நான் எதிர்க் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் சட்ட விதிகளைப் புறக்கணித்து, ஆளும் கட்சியைச் சேர்ந்தவருக்கு பதவி அளிக்கவேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டுள்ளது. எனவே, குமரன் கல்லூரியின் தலைவர் பதவியில் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனை நியமித்துள்ள தமிழக அரசின் உத்தரவை உடனே நிறுத்தி வைக்க வேண்டும். தமிழக அரசின் சுயநல பாரபட்ச இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், திருப்பூர் வீட்டுவசதி கூட்டுறவு சங்க சட்ட விதி முறைப்படி திருப்பூர் தெற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான என்னை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரிக்கு தலைவர் மற்றும் தாளாளராக நியமிக்கவேண்டும்," என்று கூறியுள்ளார்.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications