போடியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க ஜெயலலிதா உத்தரவு !

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிராமப் புறங்களில் வசிக்கும் மாணவ மாணவியர்கள் உயர் கல்விக்காக நகரங்களை நாடி வராமல் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக தொழில் நுட்ப கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கி நடத்தி வருகிறது.
இதனை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு, தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றினை புதியதாக தொடங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இப்பொறியியல் கல்லூரி போடிநாயக்கனூர் வட்டம், மேல் சொக்கநாதபுரத்தில் 2012 - 13 கல்வி ஆண்டு முதல் செயல்படத் துவங்கும்.
இக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் அமைப்பியல் பிரிவில் 60 மாணவர்கள், இயந்திரவியல் பிரிவில் 60 மாணவர்கள், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவில் 60 மாணவர்கள், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பிரிவில் 60 மாணவர்கள், கணினி அறிவியல் பிரிவில் 60 மாணவர்கள் என 300 மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இக் கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள், தேவையான உபகரணங்கள், கணினிகள் வாங்குதல், அறைகலன்கள், ஆசிரியர் நியமனம், மாணவ மாணவியர் விடுதி, நூலகம், ஆய்வகக் கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை நிறைவேற்ற 93 கோடியே 64 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை, தென் மாவட்டங்களில் உள்ள மாணவ மாணவியர் தொழில் நுட்பக் கல்வி பயில பேருதவியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications