கூடங்குளத்தில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்-தா. பாண்டியன் வலியுறுத்தல்
நெல்லை: கூடங்குளத்தில் இயல்பு நிலை திரும்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் கடந்த 6 மாதமாக போராட்டத்தை கடை பிடித்து வருகின்றனர். பொதுமக்களிடம் நல்லுறவு, சகஜ நிலை திரும்ப கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்.
முதல்வர் அல்லது முதல்வரால் நியமிக்கப்பட்ட குழு போராட்டக்காரர்களை சந்தித்து பேச வேண்டும். அணு உலை எதிர்ப்பாளர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடவில்லை. இந்தியாவில் எங்கும் அணு மின் நிலையம் வேண்டாம் என்ற கருத்தை மட்டுமே தெரிவித்து வருகின்றனர். ஜனநாயக நாட்டில் அமைதியான வழியில் போராட அனைவரும் உரி்மை உண்டு.
இடிந்தகரை பகுதியில் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்கள் தடை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா நேரிடையாக தலையிட வேண்டும். அணு மின் நிலையத்திற்குள் விருப்பத்தோடு பணிக்கு செல்பவர்களை தடுக்க கூடாது. அரசு எடுத்த முடிவக்கு எதிராக போராட்டக்காரர்கள் செயல்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 26ம் தேதி வெளியாக உள்ள பட்ஜெடில் குடிநீர், பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் ஏரி, குளங்கள், ஆறுகளை மேம்படுத்த வேண்டும். எந்த ஒரு வளரும் நாடும் விஞ்ஞானத்தை பயன்படுத்திதான் வளர்ச்சி அடைய முடியும். அதனை தடுப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications