“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி!
மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான ஐந்து முன்னாள் காவலர்களின் மனுவை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குற்றவாளிகளுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கின்போது விசாரணைக்காக அங்குள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் போலீஸ் கஸ்டடியில் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். இந்த 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவலர்களில் 5 பேர், தங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கக் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சிறையில் அவர்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாது என்பதை இந்த மனு தள்ளுபடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications