வர்த்தக நிறுவனங்களுக்கான கேஸ் விலையை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்: வணிகர் பேரமைப்பு
சென்னை: வர்த்தக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விலையை குறைக்காவிட்டால் வணிகர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா, பொதுச்செயலாளர் கே.மோகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஓட்டல்கள், டீ, டிபன் கடைகள், பேக்கரி, ஸ்வீட் கடைகள் நடத்தும் வணிகர்கள் திருமண விழாக்களை நடத்துவோர் உள்ளிட்ட அனைவரும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையை விட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டர் குறைந்த விலையில் கிடைப்பதற்கு ரூ.400 அளவில் அரசு மான்யம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கணக்கிட்டாலும் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சிலிண்டர் விலை ரூ.1000க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து அவ்வப்போது விலையை உயர்த்தி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்படுகின்றது என்று எண்ணைய் நிறுவனங்களால் காரணம் கூறப்படுகின்றது. தற்போது 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1,667ல் இருந்து 1,890 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மிக அதிகம் ஆகும்.
எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசு இப்பிரச்சனையில் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு தடை விதித்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த விலை உயர்வால் ஹோட்டல், டீ, டிபன் கடைகள் நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் விலை உயர்வால் பொதுமக்களும் பாதிக்கப்படுவர். மேலும் இந்த கேஸ் சிலிண்டர்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை எண்ணெய் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.
சிறிய, நடுத்தர வணிகர்கள் பயன்பெறும் வகையில் வணிக ரீதியான சிலிண்டரின் விலையை பாதியாக குறைத்து உத்தரவிட வேண்டுகிறோம். இந்நிலை தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக பாதிக்கப்படும் வணிகர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளனர்.