ரூ1,500 கோடி வரிவிதிப்பால் யாருக்கும் பாதிப்பில்லை: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 1,500 கோடி வரி விதிப்பால் சாமானிய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று நிதி அமைச்சர்ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அவர் பேசியதாவது:
2012-13-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் 40 உறுப்பினர்கள் பேசியுள்ளனர். துரிதமான நீடித்த நிலையான அனைவருக்கும் பயன்தரக்கூடிய விரிவான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர் கருணாநிதி, பூஜ்யத்திலே ராஜ்யம் என கிண்டல் செய்துள்ளார். அவரது ஆட்சியில் பூஜ்யமான தமிழகத்தை ராஜ்யமாக்கும் பொறுப்பை ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்துள்ளனர்.
வறுமை இல்லாத தமிழ்நாடு: தமிழகத்தை வறுமை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன் நோக்கமாகும். இதனை நிறைவேற்ற அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி அவசியம். அதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் முதன்மைத் துறைகளான விவசாயம், தொழில்துறையை வலுப்படுத்த வேண்டும். கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும். ஆதரவற்றோருக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். இவற்றையெல்லாம் உள்ளடக்கியதாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள்.
ஆதிதிராவிடர் துணை திட்டம்
ஆதரவற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ. 1,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக்கு இதுவரை இல்லாத வகையில் மொத்த திட்ட ஒதுக்கீட்டில் 21.8 விழுக்காடு அதாவது ரூ. 6,109 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக அவர்களுக்கே சென்று சேருவதை இந்த அரசு உறுதி செய்யும்.
மேலும் முதன்மைத் துறைகளான விவசாயம், கால்நடைத் துறை, மீன்வளம், வனவளம், கூட்டுறவு, நீர்வளம் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதன்மைத் துறைக்கு மொத்தமாக 2010-11 திமுக ஆட்சியில் ரூ. 5,674.27 கோடி ஒதுக்கப்பட்டது. 2012-13-ல் இதற்காக 75 விழுக்காடு அதிகமாக ரூ. 9,942.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விஷன் 2023
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-க்காக ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக பல உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள். இந்தத் திட்டம் அடுத்த 11 ஆண்டுகளுக்கானது. தேவையெனில் கூடுதல் நிதியை ஒதுக்க அரசு தயாராக உள்ளது.
கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி
தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்துக்கு தொடக்க நிதியாக ரூ. 1,000 கோடி, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 5,251 கோடி, 3 ஆயிரம் புதிய நகர பஸ்கள் வாங்க ரூ. 545 கோடி, மோனோ ரயில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 750 கோடி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்துக்கு ரூ. 1,500 கோடி பங்கு மூலதனம், மின் பகிர்மான வசதிகளை ஏற்படுத்த ரூ. 3,573 கோடி என அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2010-11 திமுக ஆட்சியில் ரூ. 2,729 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2012-13-ல் ரூ. 2,376 கோடியாக இருக்கும். 2010-11 திமுக ஆட்சியில் 3.21 விழுக்காடாக இருந்த நிதிப் பற்றாக்குறை, 2012-13-ல் 2.87 விழுக்காடாக குறைக்கப்படும். மாநில அரசு செலுத்த வேண்டிய வட்டி 2010-11-ல் 11.98 விழுக்காடாக இருந்தது. 2012-13-ல் இது 10.88 விழுக்காடாகக் குறையும்.
மாநில அரசு ரூ. 20,716 கோடி வரை கடன் பெறலாம் என்றாலும் 2012-13-ல் நிகர கடன் அளவு ரூ. 18,387 கோடியில் கட்டுப்படுத்தப்படும். ரூ. 1,500 கோடிக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்கள். இதனால் சாமானிய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார் அவர்,












Click it and Unblock the Notifications