சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மகாராஷ்டிர அரசு பரிந்துரை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் தெண்டுல்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவையில் புதன்கிழமையன்று முதலமைச்சர் பிரித்விராஜ் சவாண் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்
"மகாராஷ்டிர மண்ணின் மைந்தரான சச்சின் தெண்டுல்கர், நாட்டின் இளையதலைமுறைக்கு ரோல்மாடலாக திகழ்ந்து வருவதாகவும்" சவாண் கூறியுள்ளார்.
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிவெல்வதற்கு முன்பே இருந்து பலதரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சதத்தில் சதமடித்து சரித்திரம் படைத்துள்ள நிலையில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசும் வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் யஷ்வந்த்ராவ் சவாணுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
யஷ்வந்த்ராவ் சவாண்
மகாராஷ்டிர மாநிலத்தின் முதலாவது முதலமைச்சரான சவாண், 1962-ல் கிருஷ்ண மேனன் ராஜினாமாவைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். இந்தியா- பாகிஸ்தான் இடையே 1965-ம் ஆண்டு போரின் போதும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். 1970-ம் ஆண்டு நிதி அமைச்சராகவும் 1974-ல் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த சவாண் 1978-79ல் சரண்சிங் அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்தார்.