கூடங்குளம்: நக்சலைட் தொடர்பால் கைதானவருக்கு 18ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
வள்ளியூர்: நக்சலைட் தொடர்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கூடங்குளம் போராட்டக்குழுவைச் சேர்ந்த சதிஷ் குமார் மற்றும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ஈரோட்டில் கைதான முகிலன் ஆகிய 2 பேரையும் வரும் 18ம் தேதி வரை திருச்சி சிறையில் அடைக்க வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உடனே பணிகளைத் துவங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 19ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து அன்றே அணு மின் நிலைம் திறக்கப்பட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அங்கு பணிகள் தொடங்கியவுடன் அதைக் கண்டித்து கூட்டப்புளி கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பழவூர் போலீசார் 178 பேரை கைது செய்து திருச்சி மற்றும கடலூர் சிறைகளில் அடைத்தனர். இவர்களில் 30 பேருக்கு ஏற்கனவே கடந்த வாரம் நெல்லை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.
மீதமுள்ள 148 பேருக்கு நெல்லை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதில் பழவூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி திருச்சி, கடலூர் மற்றும் நாங்குநேரி இளையோர் சீர்திருத்த பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்ட 40 பெண்கள் உள்பட 148 பேர் 2 பேருந்துகளில் நேற்று காலை 10 மணிக்கு பழவூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.
மேலும் நக்சலைட் தொடர்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சதிஷ் குமார் மற்றும் கூடங்குளம் போராட்டம் தொடர்பாக ஈரோட்டில் கைது செய்யப்பட்ட முகிலன் ஆகிய 2 பேரும் வள்ளியூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அவர்களை வரும் 18ம் தேதி வரை திருச்சி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications