விளாத்திகுளம் நீதிமன்றத்தில் களேபரம்- நீதிபதி முன் ஊழியருக்கு சராமரி அடி, உதை
கோவில்பட்டி: விளாத்திகுளம் நீதிமன்றத்தில் நீதிபதி கண்முன் ஊழியரை கொலைக் குற்றவாளி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ரவி என்ற ராமன். தந்தை, மகன் இருவரும் ஒரிசா மாநிலத்தில் சிமிண்ட் தொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கடந்த 3 மாதத்திற்கு முன்னர் அயன்பொம்மையாபுரத்துக்கு வந்து விட்டனர். மீண்டும் ஒரிசாவுக்கு செல்லாமல் ஊரை சுற்றிவந்திருக்கிறார் ரவி. இதைத் தட்டிக்கேட்டதால் பாட்டியை அரிவாளால் ரவி வெட்டிக் கொன்றுவிட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டார்.
இதையடுத்து விளாத்திகுளம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தம்மை கைது செய்தால் போலீசாரையும் வெட்டுவேன் என்று ரவி மிரட்டியதால் அவனை சாமர்த்தியமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.
அங்கிருந்தவர்களிடம் மிளகாப் பொடியை வாங்கி கையில் வைத்துக் கொண்ட போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று ரவியின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி மடக்கினர்.
பின்னர் அவரை கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற ஊழியர் முத்துசாமி கொலை பற்றி விவரங்களைக் கேட்டிருந்தார். திடீரென ஊழியர் முத்துசாமியின் கன்னத்தில் அறைந்த ரவி அவரை சராமரியாகத் தாக்கினார். இதைத் தொடர்ந்து போலீசார் ரவியை மடக்கிப் பிடித்து கட்டிப்போட்டனர்.
இச்சம்பவத்தால் விளாத்திகுளம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications