'அம்மா'வின் சொந்தமே எங்கள் சொந்தம்: சசி குறித்து ஓ.பி. சூசகம்!
சென்னை: "முதல்வரின் சொந்தமே எங்கள் சொந்தம். முதல்வரின் நட்புகளே எங்கள் நட்பு'' என்று முதல்வர் ஜெயலலிதா- சசிகலா உறவு குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சூசகமாகப் பேசினார்.
பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசுகையில், பூகோள பாடத்தில் வேண்டுமானால் இந்தியாவின் தலைநகர் டெல்லி என்று இருக்கலாம். ஆனால், அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் தலைநகர் இனி சென்னை தான்.
இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது புரட்சித் தலைவி அம்மா தான். எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. அம்மாவின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. அம்மாவின் நட்பே எங்கள் நட்பு.
எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. அம்மாவின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. அம்மாவின் வழியே எங்கள் வழி.
அம்மாவுக்கு எங்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் சமர்பிப்போம் என்றார்.
ஜெயலலிதா-சசிகலா உறவைத் தான் அவர் குறிப்பிட்டுப் பேசினார் என்பதை உணர்ந்து கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் மேஜைகளைத் தட்டி மகிழ்ந்தன.