தூத்துக்குடி மாவட்ட போலீசார் ஒரே நாளில் அதிரடி இடமாற்றம் - எஸ்பி உத்தரவு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரே நாளில் 559 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதுநிலை காவலர்கள் என ஒரே காவல் நிலையத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த போலீசார் அனைவரும் இடமாற்றம் செய்ய எஸ்பி ராஜேந்திரன் முடிவு செய்தார். இதையடுத்து முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 15 சப் இன்ஸ்பெக்டர்கள், பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து 41 காவல் நிலையங்கள் மற்றும் 7 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் முதல் நிலை காவலர்கள், ஏட்டுகள், சிறப்பு எஸ்ஐக்கள், பெண் போலீசார் என 544 பேர் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டனர். இதில் 158 சிறப்பு எஸ்ஐக்கள், 190 ஏட்டுகள், 158 முதல் நிலை காவலர்கள், 38 போலீசார் பிற காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 33 பேர் பெண்கள். தூத்துக்குடியில் ஓரே நேரத்தில் மொத்தம் 559 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தற்போது பணியாற்றிய காவல் நிலையங்களில் இருந்து பலர் தொலை தூரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ளவர்கள் வடபகுதிக்கும், மேற்கு பகுதியில் உள்ளவர்கள் கிழக்கு பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த நாளே பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் போலீசார் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரும் அதி்ர்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications