கொளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை காலி செய்யும் அரசாணை ரத்து, அலுவலகம் ஸ்டாலினுக்கே: ஹைகோர்ட்
சென்னை: கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை காலி செய்யும் அரசாணையை ரத்து செய்ததுடன், அந்த அலுவலகத்தை அத்தொகுதி எம்.எல்.ஏ.வான மு.க. ஸ்டாலின் பயன்படுத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். கொளத்தூர் ஜவகர் நகர் முதல் வட்ட சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி கட்டிடத்தில் எம்.எல்.ஏ. அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தை தான் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகம் இயங்கி வரும் கட்டிடம் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் என்பதால் அதை திரும்ப எடுத்துக்கொள்ள மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அந்த அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும், அவ்வாறு வராவிட்டாலும் தெருவில் அமர்ந்தாவது மக்களி பணியாற்றப்போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை காலி செய்யும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் எம்.எல்.ஏ. என்பதால் அவர் அந்த அலுவலகத்தை பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.