காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டத் தேவையில்லை: கர்நாடக பாசனத்துறை அமைச்சர்
காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிறகு நேற்று கடிதம் எழுதினார்.
அந்த கடித்தத்தில் அவர் கூறுயிருப்பதாவது,
காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் இறுதியாக கடந்த 10.2.2003 அன்று நடந்தது. இக்கூட்டம் கூட்டப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டது. இதையடுத்து கடந்த 17.10.2011 அன்று தங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள உத்தரவுகளை அமல்படுத்தும்படி மத்திய நீர்வள அமைச்சகத்தை வலியுறுத்தும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி அந்த உத்தரவுகளை அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மத்திய நீர்வள அமைச்சகம் எனக்கு தெரிவித்து இருந்தது. ஆனால், அதன்படி கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை. குறிப்பாக மிகவும் நெருக்கடியான கால கட்டமான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தண்ணீர் வழங்கவில்லை.
கர்நாடகம் காவிரி நீரைத் தவறாகக் கையாள்கிறது. தமிழகத்தின் நீரையும் சேர்த்து நான்கு அணைகளில் சேமித்துக் கொள்கிறது. கர்நாடகம் தனது கோடை காலத் தேவைக்காக கடந்த பிப்ரவரி மாதம் 58.50 டி.எம்.சி. நீரையும் மே மாதம் 28.176 டி.எம்.சி, நீரைத் தனது நான்கு அணைகளின் மூலம் சேகரித்து வைத்துள்ளது.
தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரையும் சேர்த்து எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடியும் சம்பா சாகுபடியும் பெருமளவு பாதித்துள்ளது. இந்தச் செயலைக் கண்டிக்கவும் தமிழகத்துக்குத் தரப்பட வேண்டிய நீரைப் பெற்றுத் தரவும் காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில்,
கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகம் தமிழகத்திற்கு கூடுதலாகவே தண்ணீர் வழங்கியுள்ளது. மத்திய நீர்வள கமிஷனின் நீர் அளவை கணக்கிடும் நிலையமும் கர்நாடகம் தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது. அதனால் காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்றார்.