ராமஜெயம் கடத்தப்பட்டது எப்போது?: கே.என்.நேருவிடம் போலீஸ் கமிஷனர் மீண்டும் விசாரணை
நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மார்ச் 29ம் தேதி கை, கால்களை கட்டப்பட்ட நிலையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுகி கிடந்தார்.
அவரது உடல் திருச்சி கல்லணை ரோட்டில் பொன்னுரங்கபுரம் என்ற இடத்தில் ஒரு முட்புதரில் கிடந்தது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கொலை நடந்ததாக கூறப்பட்ட மார்ச் 29ம் தேதி காலை 11 மணிக்கு ராமஜெயத்தின் மனைவி தில்லைநகர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், அதிகாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்குச் சென்ற தனது கணவர் ராமஜெயம் திடீரென்று மாயமாகி விட்டதாக கூறியிருந்தார்.
ஆனால், அவர் கொல்லப்பட்ட நேரம் நள்ளிரவு 2 மணியளவில் இருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் காலை 5 மணிக்குக் கடத்தப்பட்டவர் எப்படி முதல் நாள் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுவரை அவர் அதிகாலையில் தான் கடத்தப்பட்டார் என்று விசாரித்து வந்த போலீசார், தற்போது கிடைத்துள்ள தகவலால் குழப்பமடைந்துள்ளனர்.
இது குறித்து கே.என்.நேருவிடம் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். நேருவிடம் ஏற்கனவே 2 முறை இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் கமிஷனர் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.