மீனவர் படுகொலை விவகாரம்: இந்திய தூதருக்கு இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் சம்மன்
ரோம்: இந்தியாவில் உள்ள தூதரை திரும்ப அழைத்த நிலையில் இத்தாலியில் உள்ள இந்திய தூதருக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி தமது கவலையைத் தெரிவித்துள்ளது.
கேரள கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் இருவரை இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்த இத்தாலிய கடற்படையினர் இருவர் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலியர் இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இருவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இந்தியாவுக்கான இத்தாலிய தூதரை நாடு திரும்புமாறு அந்நாடு உத்தரவிட்டிருந்தது. இருதரப்பு உறவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தக் கூடிய சமிக்ஞைதான் இந்நடவடிக்கை என்றும்கூட இத்தாலி தெரிவித்திருந்தது.
இச்சூழலில் இந்தியத் தூதருக்கு இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்த இந்திய தூதர் திபர்தா ஷாவிடம் இத்தாலியர் சிறையிலடைக்கப்பட்டது தொடர்பான அந்நாட்டின் கவலை தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷா, இத்தாலிய அரசின் நிலைப்பாடு பற்றி தம்மிடம் தெரிவிக்கப்பட்ட தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications