அன்னா ஹசாரேவுக்கு உடல்நலக் குறைவு- மருத்துவமனையில் அனுமதி
நாசிக்: சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் அன்னா ஹசாரே இன்று நாசிக் வந்திருந்தார். ஆனால் அவர் தமக்கு உடல்நலக் குறைவாக இருப்பதாகத் தெரிவித்ததால நாசிக்கில் உள்ள சாய்பாபா இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நந்துர்பர் மாவட்டத்தில் இன்று அவர் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அன்னா ஹசாரேவின் உடல்நிலையில் கவலை கொள்ளும் வகையில் பாதிப்பு இல்லை என்பதால் நாளை மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார்.
கடந்த ஜனவரி மாதமும் அன்னா ஹசாரேயின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் 5 மாநில பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.