கருணாநிதி, மமதா 'ஆப்சென்ட்'-பிரதமர் விருந்தில் முலாயமுக்கு திடீர் மரியாதை!

நேற்று இரவு பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். கருணாநிதி, மமதா மட்டும் பங்கேற்கவில்லை. திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்றார். ஆனால் நேற்றைய ஹைலைட் தலைவராக முலாயம் சிங் யாதவ் உருவெடுத்தார். விருந்தின்போது சோனியா காந்திக்கு அடுத்த சீட்டை அவருக்குக் கொடுத்து அதன் மூலம் முலாயமுக்கு முக்கியத்துவம் தரப்படுவதை காங்கிரஸ் கட்சி உணர்த்தியது. இதன் மூலம் முரண்டு பிடிக்கும், முசுடு பிடித்த கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் கோடிட்டுக் காட்டியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
இத்தனைக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் கூட இல்லை சமாஜ்வாடிக் கட்சி. அவ்வப்போது காங்கிரஸுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிதான் அது. ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் போகஸ் லைட்டை முலாயம் பக்கம் காங்கிரஸ் திருப்பி விட்டதைப் பார்க்கும்போது ஏகப்பட்ட அர்த்தம் அதற்குத் தெரிவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் முக்கிய ஆப்சென்ட் மமதா பானர்ஜிதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலேயே காங்கிரஸுக்கு அடுத்த பெரிய கட்சி திரினமூல்தான். இக்கட்சித் தலைவர் வரவில்லை. அதேபோல 3வது பெரிய கட்சியான திமுக சார்பில் அதன் தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. டயட்டில் இருப்பதால் விருந்தில் மு.க.அழகிரியும் கலந்து கொள்ளவில்லை. வழக்கம் போல டி.ஆர்.பாலுதான் கலந்து கொண்டு சாப்பிட்டார்.
சோனியா காந்தியுடன் அவரது டேபிளில் அமர்ந்து டின்னர் சாப்பிட்டார் டி.ஆர்.பாலு. அதேபோல ராகுல் காந்தி, ஒமர் அப்துல்லா, கரன் சிங், திரினமூல் காங்கிரஸின் செளகதா ராய், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் சோனியா அமர்ந்திருந்த டேபிளிலேயே சாப்பிட்டனர்.
பிரதமர் அமர்ந்திருந்த டேபிளில் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ராம் விலாஸ் பாஸ்வான், அஜீத் சிங், சதரத் பவார் ஆகியோர் காணப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்கள், குடியரசுத் தலைவர் பதவிக்காக பிரணாப் முகர்ஜியை விட்டுக் கொடுப்பீர்களா என்று பிரதமரிடம் கேட்டபோது அவர் சிரித்தார், ஆனால் பதிலளிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications