ஆட்சி தான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
குடியாத்தம்: அன்று திமுக ஆட்சியில் என்னவெல்லாம் நடந்ததோ, அதே காட்சி தான் தற்போது அதிமுக ஆட்சியிலும் நடக்கிறது என்று சிபிம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது,
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டையில் வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முத்துக்குமரன் விபத்தில் பலியானதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதியது.
ஆனால் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிமுக தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்துள்ளது. கூட்டணி விதிகளின்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கவில்லை.
இந்த தேர்தலில் அதிமுக தில்லு முல்லு செய்யும். தேர்தல் நேர்மையாக நடக்காது என்று கூறி திமுக தேர்தலை புறக்கணித்துள்ளது. இதே போன்று மதிமுக, காங்கிரஸ் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை திருமங்கலம், தொண்டாமுத்தூர், பர்கூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் பணம் ஆறாக ஓடியது. அதிகார துஷ்பிரயோகம், தில்லு முல்லு, அராஜகம், வன்முறை நடைபெற்றதாகக் கூறி அதிமுக தேர்தலை புறக்கணித்தது.
அன்று திமுக ஆட்சியில் என்னவெல்லாம் நடந்ததோ, அதே காட்சி தான் தற்போது அதிமுக ஆட்சியில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அரங்கேறியது. தற்போதும் அதே தான் நடக்கப் போகின்றது. இந்த இரு கட்சிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நிற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சாது. எந்தக் கட்சியையும் தீரமுடன் களத்தில் நின்று எதிர்க்கும் வல்லமை உண்டு என்றார்.












Click it and Unblock the Notifications