திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் திருமணம் முடிந்து 11 ஆண்டுகள் கழித்து பிளஸ் டூ தேர்வெழுதிய பெண் 920 மதிப்பெண்கள் பெற்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
கர்நாடகத்தைச் சேர்ந்தவர் முத்து நாகம்மாள். கடந்த 2001-ம் ஆண்டு 10-ம் வகுப்பு முடித்தவுடன் பொள்ளாச்சியைச் சேர்ந்த தூயவனுடன் திருமணமானது. பொள்ளாச்சியில் தனியார் கூரியர் நிறுவனத்தில் தூயவன் வேலை செய்கிறார். இவர்களது மகன் 4-ம் வகுப்பு படிக்கிறார்.
வீட்டு பொருளாதாரத்துக்கு கை கொடுக்க நினைத்த நாகம்மாள் பட்டப் படிப்புக்கு முயற்சித்தார். ஆனால் பிளஸ் டூ படித்து பட்டம் பெற்றால் பயனிருக்கும் என்று நண்பர்கள் கூறிய ஆலோசனையால் டுடோரியல் சென்று தீவிரமாக படித்தார். அதுவரை பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் கைவிட்டுவிட்டு தமக்குத் தாமே ஆசிரியராக இருந்து படித்து தேர்வெழுதினார்.
நேற்று வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் முத்து நாகம்மாள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 920. தமிழ் 158, ஆங்கிலம் 140, பொருளாதாரம் 159, வணிகவியல் 156, கணக்குப் பதிவியல் 164, வணிகக் கணிதம் 143 என அசத்தியிருக்கிறார் நம்பிக்கைக்கு முன்னுதாரணமான நாகம்மாள்.












Click it and Unblock the Notifications