மத்திய அரசுக்கு மார்க் போட விரும்பாத கருணாநிதி: 100/100 தந்த அழகிரி!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்தது. 3வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போககு கூட்டணி தலைவர்கள், எம்.பி.க்கள் ஆகியோருக்கு நேற்றிரவு விருந்து அளித்தார். அந்த விருந்தில் திமுக தலைவர் கருணாநிதி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மத்திய அமைச்சர் முக அழகிரி டயட்டில் இருப்பதால் விருந்துக்கு செல்லவில்லை.
இந்நிலையில் இது குறித்து கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மத்தியில் 3 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு, மதிப்பெண் கொடுக்க விரும்பவில்லை என்றார். லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்க மமதா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளது பற்றி அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
உட்கட்சி பூசல் முற்றிய பிறகு நீண்ட நாட்கள் கழித்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேற்று தான் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மதுரை மாவட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.
அந்த சந்திப்புக்கு பிறகு அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் தருவதாகக் கூறினார். மேலும் தான் டயட்டில் இருப்பதால் தான் பிரதமரின் விருந்துக்கு செல்லவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications