இலங்கை சிறைகளில் விசாரணையின்றி அல்லல்படும் ஈழத்தமிழர்களை உடனே விடுவிக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்
சென்னை: சிறைக்கொட்டடிகளில் கைதிகளாக இருக்கும் தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்க ஐ.நா. மன்றமும், மனித உரிமை ஆணையமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொழும்பு மாவட்டத்தில் உள்ளவெலிக்கடைச் சிறை, மகசின் சிறை, கொழும்பு மத்தியச் சிறை, கண்டி மாவட்டம் பூகம்பறை சிறை, காலி மாவட்டம் பூசா சிறை, வவுனியா மாவட்டச் சிறை, அநுராதபுரம் மாவட்டச் சிறை, யாழ்ப்பாணம் மாவட்டச் சிறை ஆகிய சிறைகளில் 4,000 பேர் விசாரணை இன்றி அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
பொலனருவா மாவட்டம் வெலிக்கந்தை முகாமில் 2,000 பேரும், வவுனியா மாவட்டத்தில் கணேசபுரம் முகாம், மட்டக்களப்பு மாவட்டம் கந்தக்காடு முகாம் இரண்டிலும், இரண்டாயிரம் தமிழர்களும் ஏறத்தாழ கைதிகளாகவே அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த இடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது. உற்றார், உறவினரை இழந்து, உரிமைகள் இழந்து, சித்ரவதைகளுக்கு ஆளாகி, சிறைக்கொட்டடிகளில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்களை சிங்கள அரசு விடுவிக்க ஐ.நா. மன்றமும், மனித உரிமை ஆணையமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய அரசு, மேலும் மேலும் குற்றச்சாட்டுக்கும், பழிக்கும் ஆளாகாமல், தமிழர்களைச் சிறையில் இருந்து விடுவிக்க இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications