கேரளா, உத்தர்காண்ட்டில் பெட்ரோல் மீதான விற்பனை வரி குறைக்கப்பட்டதால் விலை குறைந்தது
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது எண்ணெய் நிறுவனங்களின் வரலாறு காணாதா பெட்ரோல் விலை உயர்வு. இந்த விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களைக் கைகாட்டிவிட்டு மத்திய அரசு தப்பித்துக் கொண்டிருக்கிறது.
இன்னொருபுறம் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விற்பனை வரியைக் குறைத்து பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுரையும் கொடுத்திருக்கிறது.
இதற்கேற்ப கேரள மாநிலத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலையானது 1 ரூபாய் 63 காசுகள் வரை குறைந்திருக்கிறது.
இதேபோல் உத்தர்காண்ட் மாநிலத்திலும் பெட்ரோல் மீதான விற்பனை வரி குறைக்கப்பட்டுள்ளதால் அங்கும் பெட்ரோல் விலை சற்றே குறைந்திருக்கிறது. உத்தர்காண்ட்டில் 1 ரூபாய் 87 காசுகள் பெட்ரோல் விலை குறைந்திருக்கிறது.
ஆளும் காங்கிரஸ் மாநிலங்களில் விற்பனை வரியைக் குறைத்து பெட்ரோல்விலையைக் குறைத்துவிட்டோம் என்று கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது என்கின்றன எதிர்க்கட்சிகள்.
இதனால் ஆளும் காங்கிரஸ் மாநிலங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் அல்லாத மாநிலங்களும் பெட்ரோல் மீதான விற்பனை வரியைக் குறைக்க வேண்டிய நிலையில் உள்ளன.