ஆப்கானிஸ்தான் பெண்கள் பள்ளியில் விஷவாயு தாக்குதல் நடத்திய தலிபான்கள்: 125 பேர் மருத்துவமனையில்
காபூல்: ஆப்கானிஸ்தான் பெண்கள் பள்ளியில் தலிபான்கள் விஷவாயுத் தாக்குதல் நடத்தியதில் 122 மாணவிகளும் 3 ஆசிரியர்களும் மூச்சுத் திணறலுக்கு உள்ளாயினர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தலிபான்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ள 11 மாகாணங்களில் 600 பெண்கள் பள்ளிகள் மூடப்படடுவிட்டன.
ஆனாலும் தலிபான்களையும் மீறி அங்கு பெண்கள் கடும் சிரமத்துக்கு இடையே கல்வி கற்று வருகின்றனர்.
இந் நிலையில் சில மாதங்களுக்கு முன் பெண்கள் பள்ளியில் குடிநீரில் விஷம் கலந்தனர். அதை குடித்த மாணவிகள் வாந்தி- மயக்கத்தால் அவதிப்பட்டனர். தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு செயலை தலிபான்கள் செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் வடக்குப் பகுதியில் உள்ள தக்ஹார் மாகாணத்தில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் தீவிரவாதிகள் புகுந்து வகுப்பறைகளில் விஷப பொருளை தெளித்தனர். இதையடுத்து அதிலிருந்து கிளம்பிய விஷ வாயுவால் வகுப்பறைகளில் இருந்த 122 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியைகளுக்கு மூச்சுத் திணறலும், மயக்கமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் அவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். அவர்களில் 30 பேர் மட்டும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications