ஓடும் ரயிலில் தண்டவாளம்- பிளாட்பாரத்துக்கு இடையே விழுந்த டிக்கெட் பரிசோதகர்: உயிர் தப்பினார்!
திருச்சி: ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த சென்னையை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் ரயில் சக்கரங்களுக்கும் பிளாட்பாரத்தின் உள்பக்க சுவருக்கும் இடையில் படுத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை திருச்சியில் இருந்து புறப்பட்டது. இதில் ஏ.சி.கோச்சில் டிக்கெட் பரிசோதகராக சென்னையை சேர்ந்த ருத்ரமூர்த்தி சென்றார்.
ரயில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் நிலையத்திற்கு நின்றபோது டிக்கெட் பரிசோதகர் ருத்ரமூர்த்தியும் இறங்கி டீ குடிக்க சென்றார். இதற்கிடையில் ரயில் புறப்படத் தொடங்கியது. இதையடுத்து ஓடிச் சென்று ரயிலில் ஏற முயன்றார்.
அப்போது கால் தவறி கீழே விழுந்தவர் பிளாட்பார்மை ஒட்டிய தண்டவாளப் பகுதிக்குள் விழுந்துவிட்டார்.
உடனடியாக சுதாரித்துக்கொண்டு பிளாட்பார சுவருக்கும், ரயில் தண்டவாளத்திற்கும் இடையில் உள்ள சிறிய இடைவெளியில் சுவரை ஒட்டி படுத்துக் கொண்டார். ஒவ்வொரு பெட்டியும் அவரை மிக நெருக்கமாக உரசுவதைப் போல கடந்து சென்றன.
இதைக் கண்ட பயணிகள் குரல் எழுப்பவே, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில்வே ஊழியர்கள் உடனடியாக வாக்கி டாக்கியில் ரயிலின் கார்டை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கார்டு உடனடியாக ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவித்து வண்டியை நிறுத்தினார். ஆனாலும் அதற்குள் அனைத்து பெட்டிகளும் ருத்ரமூர்த்தியை கடந்து சென்றுவிட்டன.
ருத்ரமூர்த்தி பெரிய அளவில் எந்தவித காயமும் இல்லாமல் தப்பிவிட்டார். முதல் உதவி சிகிச்சை பெற்ற அவர் அதே வண்டியில் ஏறி மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.












Click it and Unblock the Notifications