5 நாள் கஸ்டடியில் வைத்து ஜெகன்மோகனை விசாரிக்க சி.பி.ஐ.க்கு ஆந்திர ஹைகோர்ட அனுமதி
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும் கடப்பா தொகுதி எம்.பியுமான ஜெகன் மோகன் ரெட்டியை 5 நாள் சி.பி.ஐ. கஸ்டடியில் விசாரிக்க ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் தமது கைதை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரியிருந்த ஜெகனின் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தம்மை கைது செய்தது செல்லாது என்றும் சட்டவிரோதம் என்றும் அறிவிக்கக் கோரி ஜெகன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜெகனை 10 நாள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பு அனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி சந்திரகுமார் தமது தீர்ப்பை இன்று மாலை 3.30 மணிக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று ஜெகனை நாளை (ஜூன் 3 ) முதல் 5 நாள் சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்த ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் ஜெகனின் மனுவை தள்ளுபடி செய்தது.
முன்னதாக ஆந்திர மாநில இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஜெகனுக்கு இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.