ஜம்முவில் உள்ள ராணுவ எல்லை பகுதிகளை பார்வையிட சென்ற கர்னல் டோணி
ஜம்மு: ஜம்முவில் உள்ள நாட்டின் எல்லைப் பகுதிகளை சுற்றி பார்க்க, இந்திய கேப்டனும் கெளரவ ராணுவ கர்னலுமான டோணி இன்று செல்கிறார். ராணுவ சீருடையில் செல்லும் டோணி எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்திக்க கலந்துரையாட உள்ளார்.
இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனும் கீப்பருமான இவர், சர்வதேச அளவில் நாட்டிற்கு பல கோப்பைகளை பெற்று தந்தவர். இவரது பணியை பாராட்டி இவருக்கு கடந்த ஆண்டு இந்திய ராணுவத்தின் கெளரவ லெப்டினட் கர்னல் பதவி அளிக்கப்பட்டது.
இந்திய ராணுவத்தின் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, டோணி ராணுவ கர்னல் சீருடையில் வருவார். இந்த நிலையில் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களை சந்திக்க டோணி இன்று ஜம்முவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இன்று பூச் பகுதியில் உள்ள ஹமீர்பூரை சென்றடைந்தார். இன்று அங்கிருந்து கல்சியானில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவார். இன்று இரவு ரஜோயூரில் தங்கும் டோணி, நாளை உதம்பூரில் உள்ள வடக்கு மண்டல ராணுவ தலைமையகத்திற்கு செல்கிறார். அப்போது டோணி தலைமையில் 14 பேர் அடங்கிய ராணுவக் குழு செல்லும்.
இறுதியாக காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஷூக்கத் அலி மைதானத்தில் நடைபெற உள்ள காஷ்மீர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை பார்வையிடுகிறார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்திக்கும் டோணி, தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்.
இது குறித்து ஜம்முவை சேர்ந்த ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ஆர்.கே.பால்டா கூறியதாவது,
எல்லை பகுதிகளை பார்வையிட வரும் டோணி, ராணுவ சீருடையில் இந்திய ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவார். மேலும் எல்லைப் பகுதியில் நடைபெறும் பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவார். இந்திய ராணுவத்திற்கு டோணி ஒரு தூதராக கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது. இதன்மூலம் அதிகளவிலான இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் இணைய விரும்புவார்கள் என்றார்.