கலகலத்துக் கிடக்கும் காங்கிரஸை ஒட்ட வைத்துவிடுமா ராகுலின் கர்நாடக பயணம்?
கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. எதியூரப்பா போர்க்கொடி தூக்கிக் கொண்டிருந்த நிலையில் எதியூரப்பாவின் லிங்காயத் சமூகத்தின் சித்தகங்கா மடத்துக்கு சோனியா காந்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் எதியூரப்பா காங்கிரஸ் பக்கம் சாய்வாரோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கர்நாடக காங்கிரஸில் இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் அசராத எதியூரப்பா கூட சோனியாவை புகழ்ந்தும் பார்த்தார். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை என்றவுடன் மீண்டும் பாஜகவில் கலகக் கொடியை உயர்த்தி வருகிறார்.
கர்நாடக பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் எதிர்வரும் பேரவைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான அம்சம் என்று காங்கிரஸ் கட்சி கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தாம் தான் முதல்வர் என மூத்த தலைவர் சித்தராமையா போன்றோர் முதல்வர் கனவில் மிதக்கவும் தொடங்கினர். இதுவே அக்கட்சியிலும் பூகம்பத்தை உருவாக்கிவிட்டது.
கர்நாடக மாநில சட்ட மேலவைக்கு தமது ஆதரவாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான இப்ராகிமை சித்தராமையா பரிந்துரைத்திருந்தார். ஆனால் அதை மாநில கட்சித் தலைமை நிராகரித்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா தாம் வகித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இப்போது கர்நாட காங்கிரஸிலும் உள்கட்சி குத்துவெட்டு அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக கர்நாடக மாநிலம் வருகை தந்துள்ளார். இளைஞர் காங்கிரஸின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்திலும் தேவன்கரேயில் மாவட்ட, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்திலும் ராகுல் கலந்து கொள்கிறார்.
பாஜகவினரிடையே இருக்கும் பிளவை சாதகமாக அறுவடை செய்ய வேண்டிய காங்கிரஸோ அதிகார பசிக்காக கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் ராகுலின் பயணம் காங்கிரசாரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துமா? என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.