சுரங்க ஊழலில் ஜனார்த்த ரெட்டிக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு ஜாமீன் கொடுத்த நீதிபதி கைது?
ஆந்திர மாநிலம் ஓபுலாபுரத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்த ரெட்டி சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஜாமீன் மறுத்த சி.பி.ஐ.நீதிபதி முதன்மை குற்றவாளியான ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுத்திருந்தார். இதை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
மேலும் நீதிபதி பட்டாபிராமாராவின் செயல்பாடுகள் குறித்தும் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் புகார் கொடுக்கபப்ட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் சி.பி.ஐ நீதிபதி பட்டாபிராமாராவை சஸ்பெண்ட் செய்திருந்தது.
இந்நிலையில் பட்டாபிராமாராவ் பெற்ற லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ரூ2 கோடி அவரது மகனின் லாக்கரில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பட்டாபிராமாராவ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதி பட்டாபிராமாராவ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.