ராமஜெயம் கொலை வழக்கில் தொடரும் புலனாய்வு: கே.என். நேருவிடம் 3-வது முறையாக விசாரனை
கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தை கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்று படுகொலை செய்தனர். திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.ஐ.ஜி.அமல்ராஜ் பொறுப்பு ஏற்றார். இவர் பொறுப்பு ஏற்ற பிறகு ராமஜெயம் கொலை வழக்கின் முன்னேற்றம் குறித்து தனிப்படை போலீசாரிடம் தினமும் கேட்டு வருகிறார்.
இந்த கொலை சம்பவத்தில் இதுவரை கிடைத்த தகவல்களை வைத்து புதிய கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வார காலமாக ராமஜெயத்தின் கார் டிரைவரிடம் டி.ஐ.ஜி.அமல்ராஜ் விசாரணை நடத்தி வந்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு கே.என்.நேருவிடம் சுமார் அரை மணி நேரம் டி.ஐ.ஜி. விசாரித்தார். ராமஜெயம் கொலை வழக்கு தற்போது சூடு பிடிக்க தொடங்கி உள்ளதால், விரைவில் கொலையாளி யார்? என்பது தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.