நன்கொடை பணத்தில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளிக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: மாணவர்களிடம் நன்கொடை வாங்கி அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த பெண்கள் நல அமைப்பின் நிர்வாகி மல்லிகா என்பவர் அண்ணாநகர் மேற்கு விரிவாகத்தில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளி கல்வி அறக்கட்டளைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கல்வி நிறுவனங்களில் நன்கொடை என்ற பெயரில் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு தடை செய்துள்ளது. இதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளி மாணவர்களிடம் பதிவு கட்டணம் என்ற பெயரில் ரூ.5,000 வரை வசூலிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த பள்ளியின் கல்வி அறக்கட்டளை பெயரில் ரூ.70,000 முதல் ரூ.90,000 வரை ஒவ்வொரு மாணவர்களிடமும் இருந்து நன்கொடை என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளது. சென்னை அருகே மாம்பாக்கம் கிராமத்தில் 1,200 குடியிருப்புகள் கட்டுவதற்காக 20.16 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளது. சட்ட விரோதமாக மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தியது சட்ட விரோத செயலாகும்.
நடப்பு கல்வி ஆண்டில் எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி நிறுவனங்களில் 937 மாணவர்கள் எல்.கே.ஜி. வகுப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் இருந்து குறைந்த பட்சம் ரூ.50,000 வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறைகேட்டில் ஈடுபட்ட எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை மீது குற்ற நடவடிக்கை மற்றும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசாங்கம் உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாடு பள்ளி சட்டம் (கல்வி கட்டணம் முறைப்படுத்துதல்) 2009, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம், கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009, ஆகியவற்றின் கீழும் இப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை இடைக்கால நிர்வாக அதிகாரியாக நியமித்து இந்த பள்ளி அறக்கட்டளையின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் இது குறித்து இன்னும் 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு பள்ளி கல்வி செயலாளர், மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் இயக்குனர், தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய கமிட்டியின் சிறப்பு அதிகாரி மற்றும் எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.