தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
சென்னை: தெருவோரம் தங்கி, தெரு விளக்கில் படித்த சென்னை மாணவி திவ்யா பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூக்கடை கோவிந்தப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா. அவரது முகவரியே இந்த தெரு தான். அவரது தாய் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தில் பலியானார். தந்தையோ குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார். திவ்யாவுக்கு 2 தம்பிகளும், ஒரு தங்கையும் உள்ளனர். அவர்கள் பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் இரவில் தெருவோரத்தில் தான் தூங்குகிறார்கள். பாட்டி மீன் வண்டி இழுத்து அவர்களை காப்பாற்றி வருகிறார்.
படிப்பில் ஆர்வமுள்ள திவ்யா வால்டாக்ஸ் ரோடு மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு தன்னால் படிக்க வைக்க முடியாது என்று பாட்டி கூறியதால் அவர் கனத்த மனதோடு படிப்பை நிறுத்தினார். ஆனால் திவ்யாவின் திறமை பற்றி தெரிந்த அந்த பள்ளி ஆசிரியைகள் அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு அவர் நள்ளிரவு வரை தெரு விளக்கில் படித்து தேர்வும் எழுதினார்.
தேர்வில் அந்த பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகயாக ஆசை. நல்ல நிலைமைக்கு வந்து தம்பிகள், தங்கையை காப்பாற்ற விரும்புகிறார்.